இறைவர் : அருள்மிகு ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர்
இறைவி :அருள்மிகு மீனாட்சியம்மன்
தல மரம் :வன்னி மரம்
தீர்த்தம் :ஆதிசேஷ தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர் திருக்கோவில், வேந்தன்பட்டி , தல வரலாறு.
தல வரலாறு
நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய்யை ஈ, எறும்பு மொய்ப்பதில்லை. புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. இங்கு சொக்கலிங்கேஸ்வரரும், மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோவிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வருவதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். 'தம்பி நந்தி' என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி - 622 419, புதுக்கோட்டை மாவட்டம்.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், பொன்மராவதி அருகில் வேந்தன்பட்டி இருக்கிறது.